தமிழ் வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021 - 22 ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவர்கலால் நேரு ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாள் அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளன்று அன்று நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், சிறப்பு பரிசு ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட்டது.
இப்பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற 16 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை மொத்தம் ரூ.48 ஆயிரத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.