நாமக்கல்லில் ஆள்கடத்தல், நிவாரணம் குறித்து சிறப்பு கருத்தரங்கம்
ஆள் கடத்தல் மற்றும் நிவாரணம் குறித்த கருத்தரங்கம், நாமக்கல்லில் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, தமிழ்நாடு அலையன்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில மனித உரிமை கமிஷன் இணைந்து நடத்திய, ஆள்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்த கருத்தரங்கம், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குணசேகரன் தலைமை வகித்தார். ஆணைக்குழு செயலாளர் விஜய் கார்த்திக் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.
நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் நடவடிக்கையால், மிக குறுகிய காலத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 67 பேருக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைசெய்து உத்தரவிட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபட்டு, அரசிடம் இருந்து நிவாரணம் வரப்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆள்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்தும், இதுபோன்ற சம்பவங்களுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலம் செய்ய வேண்டிய உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் பாலமுருகன், உலகெங்கும் நடக்கும் ஆள்கடத்தல் மூலம் மனித உரிமை மீறல், பொருளாதார சுரண்டல் என பெரும் வியாபாரம் நடப்பது குறித்து பேசினார். தமிழ்நாடு மாநில மனித உரிமை கமிஷன் சட்ட உதவி மைய வக்கீல் டேவிட் சுந்தர் சிங், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்து பேசினார். 60க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வக்கீல் சதீஷ்குமார் நன்றிதெரிவித்தார்.