நாமக்கல்: 344 அரசு துவக்கப்பள்ளிகளில் மேலாண் குழு உறுப்பினர்கள் தேர்வு
நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் நடந்த உறுப்பினர் தேர்வை, கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு பேசினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஊராட்சி துவக்கப்பள்ளிகளில், பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்குத் துணை நிற்கவும், பள்ளி மேலாண் குழு மறுகட்டமைப்பு செய்து, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பணி, மாவட்டம் முழுவதும் உள்ள 344 ஊராட்சி துவக்கப்பள்ளிகளில் நடைபெற்றது. முன்னதாக, பள்ளி மேலாண் குழுவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் நடந்த உறுப்பினர் தேர்வை, கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு பேசியதாவது:
நம் பள்ளி, நம் பெருமை என்று அனைவரும் செயல்பட, ஆசிரிய பெருமக்களுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர், பள்ளி மேலாண்மைக்குழுவில் பங்கேற்று, தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியினை தலைசிறந்த பள்ளியாக உருவாக்க வேண்டும் என்பதற்காக பள்ளி மேலாண் குழு செயல்படுகின்றது. பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் பெற்று, நம் பகுதியில் உள்ள, நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியை சிறந்த முன்மாதிரி பள்ளியாக உருவாக்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். முன்னதாக, சிலுவம்பட்டி பஞ்சாயத்து, பொரசப்பாளையம் துவக்கப் பள்ளி, நாமக்கல் கோட்டை நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலெக்டர் கலந்துகொண்டார்.