மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் அங்கீகாரம்பெறாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள், மற்றும் சிறப்புப்பள்ளிகள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி,பயிற்சி, மறுவாழ்வளித்தல் மற்றும் இதர செயல்பாட்டினை அளிப்பதே தொண்டு நிறுவனம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனத்தினை செயல்படுத்துவதற்கு நலத்துறையின் மூலம் பதிவு செய்துகொள்ளவேண்டும். அங்கீகாரம் பெறாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள், மற்றும் சிறப்புப்பள்ளிகள் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை) சட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள்,மற்றும் சிறப்புப்பள்ளிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தை தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.