தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை
-மருத்துவத்துறை இணை இயக்குனர் ஆய்வு
HIGHLIGHTS
தனியார் ஆஸ்பத்திரிகளில் முதலமைச்சர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி நம்பருக்கு புகார் செய்யலாம் என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், முதலமைச்சர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாமக்கல் மாவட்டத்தில் 23 தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிகளில் முதலமைச்சர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை நாமக்கல் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சித்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 23 தனியார் ஆஸ்பத்திரிகளிலும், கொரேனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் முதலமைச்சர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.சிகிச்சைக்கு செல்லும் முன் இன்சூரன்ஸ் அடையாள அட்டையை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுவதில் ஏதோனும் சிரமம் இருந்தாலோ, அதிக கட்டணம் வசூலித்தாலோ உடனடியாக 1800 425 3993 மற்றும் 104 ஆகிய தொலைபேசி எண்களுக்கு போன் செய்து புகார் செய்யலாம். மேலும், அரசு அனுமதி பெறாமல் சில ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதால் நோய் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது. அனுமதி பெறாமல் செயல்படும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.