ஆன்லைனில் பதிவு செய்து நெல் விற்பனை செய்யலாம்: கலெக்டர் ஸ்ரேயாசிங்
விவசாயிகள் ஆன்லைன் முறையில் பதிவு செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்யலாம்.
HIGHLIGHTS
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகப்புத்துறை, வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் (டிஎன்சிஎஸ்சி) அந்தந்த மாவட்டங்களில், இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய வசதியாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இ-டிபிசி என்று வெப்சைட்டில், சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண். உள்ளிட்ட விவரங்களை டிஎன்சிஎஸ்சி.ஜிஓவி.இன் அல்லது டிஎன்சிஎஸ்சி-இடிபிசி-இன் வெப்சைட்டில் அப்லோடு செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த வெப்சைட்டில் சம்பா பருவம் 2022-க்கு ஆன்லைன் முறையில், பதிவு செய்து, விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்துகொள்ளலாம். நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா, மற்றும் அடங்கல்) வெப்சைட்டில் பதிவேற்றம் செய்தால், விவசாயிகளின் செல்போன் நம்பருக்கு எஸ்எம்எஸ் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.
அதன் அடிப்படையில், விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள டிஎன்சிஎஸ்சி மண்டல மேலாளர் அலுவலகத்தை அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.