நாமக்கல் மாவட்ட மதுப்பிரியர்கள் திருச்சி மாவட்டத்திற்கு படையெடுப்பு : எல்லையில் போலீசார் திணறல்
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் திருச்சி மாவட்ட பகுதிக்கு படையெடுப்பதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட எல்லையில் உள்ள போலீசார் திணறி வருகின்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் திருச்சி மாவட்ட பகுதிக்கு படையெடுப்பதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட எல்லையில் உள்ள போலீசார் திணறி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் 2-வது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அங்கு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் காய்கறி, மளிகைக்கடைகள், ஹோட்டல் கடைகள், டீ கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், பால், காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளை தேடி அண்டை மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதுப்பிரியயர் அண்டை மாவட்டமான திருச்சி மாவட்ட பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக டூ வீலர்கள் மற்றும் கார்களில் சென்று வருகின்றனர். பலர் மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர்.
இதனால் நாமக்கல் - திருச்சிமாவட்ட எல்லைகளில்போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் செல்லும் பகுதியில் எருமப்பட்டி மற்றும் மோகனூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையான வடுகப்பட்டியில் சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலும், ஆண்டாபுரம் பகுதியில் மோகனூர் போலீசாரும் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து, டிரைவர்களிடம் உரிய விசாரணை நடத்திய பிறகே பயணத்தை தொடர அனுமதித்தனர். தேவையின்றி சுற்றித் தெரிந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மதுபாட்டில்களுடன் வந்தவர்களிடம் இருந்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.