வெளிநாடு செல்வோர்களுக்கு முன்கூட்டியே இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி - நாமக்கல் கலெக்டர் தகவல்
வெளிநாடு செல்வோர்களுக்கு இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி முன்கூட்டியே போடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
வெளிநாடு செல்வோர்களுக்கு இரண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி முன்கூட்டியே போடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படுகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2,27,363 பேருக்கு முதல் தவணையும், 60,320 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி போடுபவர்களுக்கு முதல் தவணை போட்ட நாளிலிருந்து 84-112 நாட்களுக்குள் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை போட்டுள்ளவர்கள் 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை போட்டுக் கொள்ளவேண்டும். இந்த சூழ்நிலையில் வெளிநாடுகளுக்கு கல்விபயில செல்வோர்கள், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போர் நலனை கருத்தில் கொண்டு இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசியினை 28 நாட்கள் முடிந்தவுடன் 84 நாட்களுக்கு முன்னரே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட தடுப்பூசி மையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வு செய்யப்பட்டு இண்டர்நெட்டில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் அதுதொடர்பாக, வெளிநாட்டுகல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம், வெளிநாட்டில் பணிபுரிவதற்கான அனுமதி கடிதம், ஒலிம்பிக் போட்டியாளர் எனில் அதற்கான சான்றிதழ் போன்ற ஆவனங்களை கொடுத்து இரண்டாம் தவனை தடுப்பூசியை ஆக.31 வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இது சம்மந்தமாக மேலும் விபரங்களுக்கு 8098001576, 6385083342 ஆகிய செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.