புதுச்சத்திரம் அருகே டாக்டர் சுப்பராயனுக்கு நினைவு அரங்கம் அமைக்க அரசு அனுமதி
Memorial Hall - நாமக்கல் அருகே, சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் நினைவு அரங்கம் அமைப்பதற்கான, நிலத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு வழங்க, ஊரக வளர்ச்சி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.
HIGHLIGHTS
Memorial Hall - திருச்செங்கோடு அருகே உள்ள, குமாரமங்கலத்தில் கடந்த, 1889 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி பிறந்தவர் சுப்பராயன். இவர் மோகன் குமாரமங்கலத்தின் தந்தை மற்றும் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தாத்தா ஆவார். சுப்பராயன் சுதந்திரப் போராட்ட வீரராகவும், மிகச்சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அவர் கடந்த 1926ம் ஆண்டு டிசம்பர் 4 முதல், 1930ம் ஆண்டு அக்டோபர் 27 வரை சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்து வந்த அவர் கடந்த 1962ம் ஆண்டு அக்.6ம் தேதி 73 வயதில், மகாராஷ்டிரா கவர்னராக பதவி வகித்தபோது உயிரிழந்தார். ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த அவர் தனது சொத்துக்களை பல ஏழைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவருக்கு திருச்செங்கோட்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் அவரது பெயரில், நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையின்போது, தமிழுக்கும், மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூக நீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்ட வடிவம் கொடுத்தவருமான, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனின், சேவைகளை நினைவு கூறும் வகையில், நாமக்கல் பகுதியில் நகரில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அவரது பெயரில் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.
இதையொட்டி, அரங்கம் அமைப்பதற்காக, நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு இடையேயான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை செய்தி மக்கள் தொடர்புத்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு, அரங்கம் அமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவனி தோட்டக்கூர்ப்பட்டி கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான 35,521 ச.அடி பரப்பு கொண்ட அந்த இடத்தை, செய்தி மக்கள் தொடர்புத்துறை பெயருக்கு நில மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், நாமக்கல் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் தெரிவித்ததன் அடிப்படையில், புதுச்சத்திரம் பகுதியில் உள்ள நிலத்தில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் சேவைகளை நினைவு கூறும் வகையில், ரூ. 2.5 கோடி மதிப்பில் நினைவு அரங்கம் அமைக்க, செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு நிலமாற்றம் செய்து கொடுக்க அனுமதி வழங்கி உள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2