ஆடி அமாவாசை நாளில் அனுமதி மறுப்பு, மோகனூரில் காவிரி ஆறு வெறிச்சோடியது
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மோகனூரில் காவிரி ஆறு வெறிச்சோடிக் காணப்பட்டது.
HIGHLIGHTS
ஒவ்வொரு மாதமும் வீடுகளில் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்களும், தர்ப்பணம் செய்ய முடியாதவர்களும் ஆடி மற்றும் தை மாதங்களில் ஆற்றங்கரையில் பூஜைகள் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆடி அமாவாசை நாளில், மோகனூரில் உள்ள காவிரி ஆற்றங்கரைக்கு வந்து, காவிரியில் புனித நீராடுவார்கள்.
தொடர்ந்து அசல தீபேஸ்வரரை தரிசனம் செய்வார்கள். பின்னர் ஆற்றங்கரையில் வரிசையாக அமர்ந்திருக்கும் அர்ச்சகர்களிடம் இறந்தவர்களின் பெயரைச் சொல்லி பிண்டங்கள் வைத்து பூஜைகள் செய்வார்கள்.
அதன்பிறகு, காவிரி ஆற்றில் இறங்கி தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். இதற்காக ஆற்றங்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் அளித்து தர்ப்பணம் செய்வதால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது.
பித்ருக்களை நினைத்து நாம் செய்யும் தர்ப்பண பூஜைகள் நமக்குப் பொருளையும், நீண்ட ஆயுளையும் சுப பலன்களையும் கொடுக்கும். பகைவர்களை ஓடச்செய்து, நமது குலத்தைத் தழைக்கச் செய்யும் என்பது ஐதீகம்.
இந்தநிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், முக்கிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மோகனூர் அசலதீபேஸ்வரர் திருக்கோயில் மூடப்பட்டதுடன். காவிரியில் நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கூட்டம் இன்றி மோகனூர் காவிரி ஆறும், அசலதீபேஸ்வரர் கோயிலும் வெறிச்சோடிக் காணப்பட்டது.