நாமக்கல்'.100 சதவீதம்கொரோனாதடுப்பூசி செலுத்திய கிராமங்களுக்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சிகள்-மருத்துவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது
HIGHLIGHTS
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய கிராமங்களைப் பாராட்டி பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் டாக்டர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. பொதுமக்களும் அனைவரும் சிறப்பு முகாம்களுக்கு சென்று ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை தாலுக்காவிற்கு உட்பட்ட பைல்நாடு பகுதியில் 319 பேருக்கும், ராசிபுரம் வட்டம் ஆயிபாளையத்தில் 580 பேர், பரமத்தி தாலுக்கா குண்ணமலையில் 524 பேர், இருட்டணையில் 696 பேர், டி.கவுண்டம்பாளையத்தில் 396 பேர், நாமக்கல் தாலுக்கா, மரூர்ப்பட்டியில் 253 பேர், சிவியம்பாளையத்தில் 514 பேர், திருச்செங்கோடு தாலுக்கா தொ.கவுண்டம்பாளையத்தில் 314 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சிக்கநாயக்கன்பாளையத்தில் 331 பேர், மல்லசமுத்திரம் பல்லக்குழியில் 744 பேர், வெண்ணந்தூர் ஒன்றியம் பழந்தின்னிப்பட்டிபுதூரில் 136 பேர், மின்னக்கல்லில் 510 பேர், போக்கம்பாளையத்தில் 275 பேர், புதூரில் 364 பேருக்கும் என, இந்த கிராமங்களில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கொரோனா தொற்றிலிருந்து தங்களையும் காத்துக்கொண்டு, பிறருக்கும் தொற்று பரவாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய கிராமங்களை பாராட்டி, பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் டாக்டர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் (பொ) ராஜ்மோகன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.