மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் நிலையத்தை இயக்க கோரிக்கை
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட இணை மின்உற்பத்தி நிலையத்தை மீண்டும் துவக்க வேண்டுகோள்.
HIGHLIGHTS
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பாதியில் விடப்பட்டுள்ள இணை மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் துவக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாய முன்னேறக்கழக தலைவர் செல்லராஜாமணி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. கட்டுமானப்பணிகள் சுமார் 75சதவீதம் முடிக்கப்பட்டது. மீதமுள்ள பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருத்தப்பட்ட இயந்திரங்கள் துருப்பிடித்து வீனாகி வருகிறது. இதனால் விவசாயிகளின் பணமும், அரசாங்கத்தின் பணமும் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
இணை மின் நிலையப் பணிகளை முழுமையாக முடித்து, விரைவில் மின்சார உற்பத்தியை துவக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, கலெக்டர் தலைமையில் மின் உற்பத்தி நிலைய கான்ட்ராக்டர், மின்சார வாரிய அதிகாரிகள், ஆலை நிர்வாகத்தினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து ஒரு கூட்டுக்கூட்டம் நடத்தி ஆலோசனை செய்ய வேண்டும். இணை மின் உற்பத்தி நிலையப் பணிகள் ஏன் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை, ஆலை உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.