நாமக்கல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 18 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தடுப்பூசியின் பயனாக பரவல் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 9முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மாணவ மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளியில் அலங்கார தோரனங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு அரசு பள்ளிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது. காலை முதலே பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.
நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்பி ராஜேஷ்குமார் ஆகியோர் மாணவ மாணவிகளை பூக்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். மேலும் மாணவ மாணவிகளுக்கு பென்சில், நோட்டுப்புத்தகம், பலூன், பொம்மைகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்கள்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) ராமன், முன்னாள் எம்.பி சுந்தரம், நகர திமுக பொறுப்பாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவகுமார், இலக்கிய அணி புரவலர் மணிமாறன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.