நகராட்சிப் பள்ளியில் குழந்தைகளுடன் காலை உணவருந்திய அமைச்சர் உதயநிதி
நாமக்கல் நகராட்சி துவக்கப்பள்ளிக்கு திடீரென்று வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குழந்தைகளுடன் அமர்ந்து கலை உணவருந்தினார்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சி துவக்கப்பள்ளிக்கு திடீரென்று வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குழந்தைகளுடன் அமர்ந்து கலை உணவருந்தினார்.
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு நாமக்கல் வந்தார். நாமக்கல் நளா ஹோட்லில் தங்கியிருந்த அவர் இன்று காலை 8 மணிக்கு, சேந்தமங்கலம் செல்வதற்காக காரில் புறப்பட்டுச்சென்றார். வரும் வழியில், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அழகுநகர், பகுதியில் இயங்கிவரும், நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு அவர் திடீர் என்று சென்றார்.
அங்கு, தமிழக அரசின் சார்பில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிக்குழந்தைகளுடன் பெஞ்சில் உட்கார்ந்து அவரும் காலை உணவு உட்கொண்டார். அப்போது குழந்தைகளுடன் கலந்துரையாடி, உணவு சுவையாக மற்றும் தரமாக உள்ளதா என கேட்டறிந்தார். மேலும், காலை எத்தனை மணிக்கு உணவுகள் வழங்கப்படுகிறது எனவும் கேட்டறிந்தார். பள்ளி ஆசிரியர்களிடம் இத்திட்டத்தின் மூலம் எத்தனை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கற்றல், கற்பித்தல் முறை, அளிக்கப்படும் பயிற்சிகள், அதற்கான அட்டவணைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், அந்தப்பள்ளியில் உள்ள கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் அவற்றை பராமரித்திட வேண்டும் என்று ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள், ராஜ்யசபா எம்.பி. ராஜேஸ்குமார், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.