பணியின்போது இறந்த அரசு ஜீப் டிரைவர் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை
நாமக்கல்லில், பணியின்போது இறந்த அரசு ஜீப் டிரைவரின் மகனுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 260 மனுக்களை அளித்தனர். பின்னர், தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுக்களை, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், முதலமைச்சரின் இலங்கை தமிழர் சிறப்பு நிவாரண நிதியிலிருந்து, 2 பயனாளிகளுக்கு மருத்துவ உதவித் தொகை தலா ரூ.15,000-க்கான காசோலைகளையும், சமூகப்பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவையும், அரசு ஜீப் டிரைவாக பணிபுரிந்து, பணிக் காலத்தின்போது இறந்த ரவியின் மகன் சக்தி கண்ணனுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப்கலெக்டர் ரமேஷ், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், இலங்கை தமிழர் மறுவாழ்வு தனி தாசில்தார் சுந்தரவள்ளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.