பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து: தமிழக அரசுக்கு சாலைப் பணியாளர்கள் நன்றி
பேக்கேஜ் டெண்டர் முறையில் சாலை பராமரிப்பை ரத்து செய்த தமிழக அரசுக்கு, சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர், இணை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தனபால் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மாநிலத்தலைவர் சண்முகராஜா பங்கேற்று பேசினார். மேலும் மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும். இறந்த சாலைப்பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கிட வேண்டும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் காலியிடங்களை நிரப்பி வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ராஜூ நன்றி கூறினார்.