கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில், சீன கொரேனா லாக்டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் மகளிர் குழுவிடம் பேங்குகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலில் ஈடுபடக்கூடாது என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சீன கொரோனா தொற்று அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அவசர தேவைக்கென மைக்ரோ பைனான்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்ற மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம், கடன் தவணைத் தொகை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தக்கூடாது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள பேங்குகள், மைக்ரோ பைனான்ஸ்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். சில நிதி நிறுவனங்கள் கடன் தொகையை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. ஆகவே கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நெருக்கடியான காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து தவணைத் தொகையை திரும்பப் பெறுவதில் கடின போக்கினை தவிர்க்க வேண்டும்.
இது தொடர்பாக புகார்களுக்கு இடமளிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகார்கள் ஏதேனும் வந்தால், சம்பந்தப்பட்ட பேங்குகள், மைக்ரோ பைனான்ஸ்கள் மற்றும் நிதி நிறுவனங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்மந்தமாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் 94440 94133 என்ற தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.