நாமக்கல்லில் 3,000 லிட்டர் போலி டீசல், லாரி பறிமுதல்: டிரைவர் கைது
நாமக்கல்லில், லாரியில் கடத்தப்பட்ட கலப்பட டீசலையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் டிஜிபி ஆபாஷ்குமார், எஸ்.பி. ஸ்டாலின் ஆகியோர் அறிவுரையின்பேரில், கோவை உட்கோட்ட போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணன் உத்தரவுப்படி, சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நாமக்கல் எஸ்ஐ அகிலன், சிறப்பு எஸ்.ஐ சத்தியபிரபு மற்றும் கிருஷ்ணகிரி எஸ்.ஐ முரளி மற்றும் போலீசார் குடிமைப்பொருள் கடத்தல் சம்மந்தமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நாமக்கல், துறையூர் ரோட்டில், கொசவம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில், அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது எவ்வித அனுமதியும் இன்றி, சட்ட விரோதமாக, அந்த லாரியில் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 3,000 லிட்டர் கலப்பட டீசல் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த லாரி மற்றும் அதில் இருந்த 3,000 லிட்டர் கலப்பட டீசல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டி வந்த விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா, கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் அபிராமன் (31) என்பவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். கலப்பட டீசலை விற்பனைக்கு கொண்டுவந்த நாமக்கல், கொசவம்பட்டியைச் சேர்ந்த பாலு (எ) பாலசுப்ரமணியம் தலைமைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.