வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை மாவட்ட பார்வையாளர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்களை, மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஞானசேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஞானசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
பின்னர் பேசிய மாவட்ட பார்வையாளர் ஞானசேகரன், நாமக்கல் மாவட்டத்தில் 1.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் தொடர்ச்சியாக, 1.11.2021 முதல் தொடங்கி 30.11.2021 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியின் போது, 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளார் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் அளிக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 702 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் சேர்த்தல் தொடர்பாக-3,682, நீக்கல் தொடர்பாக-1306, திருத்தங்கள் தொடர்பாக-806, தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பாக-718 என மொத்தம் 6,512 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும் வருகிற 21, 28 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்நாட்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் மற்றும் புகைப்படம் இரண்டு இடங்களில் இடம் பெற்று இருந்தால் பிரத்யேக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பயன்படுத்தி கூடுதல் பதிவுகள் நீக்கப்படுகின்றன.
எனவே அரசியல் கட்சியினர் தங்கள் பகுதியில் தகுதியுள்ள 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு உதவ வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் இறந்த நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அதனை நீக்க வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து, தவறில்லாத முழுமையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் பரமத்தி வேலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இளநகர் புனித தெரசாள் ஆர்.சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தப் பணிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஞானசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் டிஆர்ஒ துர்கா மூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, பிஆர்ஓ சீனிவாசன், தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.