நாமக்கல்: 16வது வார்டில் காங். வேட்பாளர் ஷேக் நவீத் தீவிர பிரச்சாரம்
நாமக்கல் நகராட்சி 16 வது வார்டில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷேக்நவீத் பிரச்சாரத்தை துவங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சி 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷேக் நவீத் போட்டியிடுகிறார். அவர், கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஸ்தூபி அருகே தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சென்று பெரியண்ணன் தெரு, கொல்லம் பட்டறை தெரு, பகவதி அம்மன் தெரு உள்ளிட்ட பகுதிகளை பொதுமக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நான் சுதந்திரப் போராட்ட தியாகி குடும்பத்தை சார்ந்த வேட்பாளர் என்பதில் பெருமை கொள்கிறேன். தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில், வெற்றி வேட்பாளராக இந்த 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறேன். எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால், நான் உங்களில் ஒருவராக இருந்து மக்களோடு மக்களாக பணி செய்யக் காத்திருக்கிறேன்.
16வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் ஆன, வார்டு முழுவதும் உள்ள பாதாள சாக்கடை தூர்வாருதல், மழைநீர் காலங்களில் நீர் தேங்காமல் இருக்க சாலையை மேம்படுத்தி புதிய சாலை அமைத்தல், சிசிடிவி கேமரா பொருத்தி வார்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் ரங்கர் சன்னதி தெரு, மெயின் ரோடு, நந்தவன தெரு, கடைவீதி பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பாடுபடுவேன் என பேசினார்.
பிரச்சாரத்தின் போது, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் , நாமக்கல் நகர தலைவர் மோகன், முத்துகாப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருள் ராஜேஷ், ஒபிசி அணி செயலாளர் அப்துல் ரகுமான், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஜாஹிர் பாஷா, 34 வது வார்டு வேட்பாளர் ஸ்டாலின், நகர செயலாளர் குப்புசாமி, முன்னாள் நாமக்கல் நகராட்சி கவுன்சிலர் சோடா ராஜேந்திரன், அப்துல்லா, பாபு , கேசவன் மற்றும் மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.