நாமக்கல் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
நாமக்கல் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதில் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.2.75 லட்சம் தப்பியது.
HIGHLIGHTS
நாமக்கல் அருகே உள்ள, புதன்சந்தை எஸ்.உடுப்பம் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துக் கொண்டு மேற்பார்வையாளர் செல்வகுமார் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைகக் கண்டு செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையினுள் சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கிருந்த பிரிட்ஜில் 2 பீர்பாட்டில்கள் மட்டும் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. மேலும் கடை கேட்டின் கதவில் உள்ள பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள், கடையில் இருந்த லாக்கரை உடைக்க முயற்சித்து உள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் தப்பியது தெரிந்தது. இதற்கிடையே மர்ம நபர்கள் லாக்கரை உடைக்க முயற்சி செய்யும் முன்பு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் வயர்களை துண்டித்து உள்ளனர். இதனால் கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.