ஒத்திவைக்கப்பட்ட 8ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் நடைபெறும்
நாமக்கல் மாவட்டத்தில், மழையால் ஒத்திவைக்கப்பட்ட, தனித்தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் 20ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல், அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த நவ.8ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடைபெற இருந்த தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, வருகிற 20ம் தேதி முதல், 24ம் தேதி வரை அந்தத்தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுகள் காலை, 10 மணி முதல், 12 மணி வரை 2 மணி நேரம் நடைபெறும். 20ம் தேதி திங்கள்கிழமை தமிழ், 21ம் தேதி செவ்வாய்கிழமை ஆங்கிலம், 22 ம் தேதி புதன்கிழமை கணிதம், 23ம் தேதி வியாழக்கிழமை அறிவியல், 24ம் தேதி வெள்ளிக்கிழமை சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும்.
மேலும், 8ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், வருகிற 14ம் தேதி முதல், இண்டர்நெட்டில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, புதிய தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கட் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.