நாமக்கல்: கடன் கொடுத்தவரும் தற்கொலை - கடன் வாங்கியவரும் தற்கொலை
நாமக்கல்லில், கடன் கொடுத்தவரும் கடன் வாங்கியவரும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி காவேரி (35). காவேரி, தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். தம்பதியர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். மரூர்பட்டியை சேர்ந்த பெயிண்டர் ராஜமாணிக்கம் (50) என்பவருக்கு, காவேரி, ரூ.3 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இந்த கடன் தொகையை பலமுறை கேட்டும் ராஜமாணிக்கம் திருப்பி தரவில்லை எனத்தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த காவேரி, சம்பவத்தன்று மாலை 6 மணிக்கு, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது கணவர் ராஜா, நாமக்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அடுத்த நாள் காலை 7 மணிக்கு, மரூர்ப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட, ராஜமாணிக்கத்ததின் உடல் சடலமாக கிடந்தது. தகவல் அறிந்த ரயில்வே போலீசார், ராஜமாணிக்கத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் பிரச்சினையில், போலீஸ் விசாரணைக்கு பயந்து, ராஜமாணிக்கம் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இச் சம்பவம் குறித்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.