நாமக்கல்லில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்
நாமக்கல்லில் எரிவாயு நிரப்பிய சில நிமிடங்களில் கார் தீப்பற்றி எரிந்தது. இதில் 2 வயது குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பாரதி(32) என்பவர் தனது மனைவி சங்கவி, 2 வயது குழந்தை நிஷா, மற்றும் உறவினர் விவேக் ஆகியோருடன் காரில் நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது நாமக்கல்லை அடுத்த முதலப்பட்டியில் உள்ள பெட்ரோல்பங்கில் எரிவாயு நிரப்பியுள்ளார். இதன் பின் பங்கிலிருந்து கிளம்பிய சில மணி துளிகளில் காரின் பின்புறத்தில் தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.
இதனை கண்ட பாரதி, காரை பங்கின் அருகில் சாலையோரம் நிறுத்திவிட்டு காரில் இருந்தவர்களை வேக வேகமாக இறக்கியுள்ளார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சில நிமிடங்களில் கார் முழுவதும் தீயில் கருகியது. எனினும் கார் வெடிக்காத வகையில் தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். எரிவாயு கசிவால் இச்சம்பவம் நடந்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீப்பிடித்ததை பாரதி பார்த்ததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் எவ்வித காயமும் இன்றி காரில் பயணித்த 2 வயது குழந்தையுடன் அனைவரும் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.