இறந்துவிட்டதாக பெயர் நீக்கம்: மனு தாக்கல் செய்ய வந்தவருக்கு அதிர்ச்சி
இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம். நாகையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பெண் வேட்பாளர் அதிர்ச்சி.
HIGHLIGHTS
உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டார் என வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதால், நாகையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பெண் வேட்பாளர் அதிர்ச்சி.
நாகப்பட்டினம் நகராட்சியில் போட்டியிட இன்று அதிமுக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் குவிந்தனர். அப்போது நாகை நகராட்சியில் 4வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிடும் அமிர்தவல்லி என்ற பெண் வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். விண்ணப்பங்களை பூர்த்தி செய்த அதிமுக வேட்பாளர் அமிர்தவல்லி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவை பரிசீலனை செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்காளர் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை என கூறி அம்மனுவை திருப்பி அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வேட்பாளர் தனது பெயரை நீக்கம் செய்ததற்கான காரணத்தை கேட்டு வாதிட்டார். அப்போது தங்களது பெயர் நீக்கப்பட்டு இறந்தவர் பட்டியலில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான அதிமுக பெண் வேட்பாளர் அமிர்தவல்லி உயிருடன் இருக்கும் என்னை இறந்தவர் பட்டியலில் ஏன்? சேர்த்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் நாகை நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காலையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தன்னிடம் பெயர் பட்டியலை சரிபார்க்கிறோம் எனக்கூறி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக பெண் வேட்பாளர், உயிருடன் இருக்கும் தன்னை இறந்தவர் பெயர் பட்டியலில் சேர்த்து அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் தன் பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து 4 வது வார்டில் போட்டியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டார் என வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதால், நாகையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பெண் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.