நாட்டுப்புறக் கலைஞர்கள் கலெக்டரிடம் மனு
ஊரடங்கு காலத்தில் மாதந்ததோறும் ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கலெக்டரிடம் மனு
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்ட கிராமியக் கலைஞர்கள் நலச்சங்கம், பாரம்பரிய பம்பை கை சிலம்பாட்டக் கலைஞர்கள் சங்கம், சிவசக்தி அனைத்து கலைஞர்கள் நலச்சங்கம், காமதேனு கிராமிய கலைக்குழு சங்கம், தெருக்கூத்து கலைஞர்கள் நலச்சங்கம், நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில்:
தமிழகத்தில் பாரம்பரிய பண்பாட்டை பேணிக் காப்பதில் பெரும் பங்காற்றி வரும் கிராமியக் கலைஞர்கள் தமிழகத்தில் 3 லட்சம் குடும்பங்களுக்கு மேலாக உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கலைநிகழ்ச்சிகள், 90 சதவீதத்திற்கு மேல் கோவில் திருவிழாக்களில்தான் நடைபெறுகிறது . தற்சமயம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் கோவில் திருவிழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்களும் செயல்பட்டு கொண்டிருக்கும்போது கிராமியக் கலைத் தொழிலாளர்கள் மட்டும் நிகழ்ச்சிகள் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அதிகமாக மக்கள் கூடும் பெரிய கோவில் திருவிழாக்களைத் தவிர்த்து, சிறிய மற்றும் கிராமக் கோவில்களில் மட்டுமாவது திருவிழாக்கள் மற்றும் கொடை விழாக்கள் நடத்திடவும், சமூக இடைவெளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும், அனுமதி வழங்க வேண்டும்.
அவ்வாறு திருவிழாக்கள் நடத்துவதில் இடர்பாடுகள் இருக்குமாயின் கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாராத்தை காத்திடும் வகையில், ஊரடங்கு தடை காலத்தில் மாதந்ததோறும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.