கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி உறுப்பினர் ஆய்வு
கரூரிலிருந்து பெங்களூருக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க ரயில்வே கமிட்டி உறுப்பினரிடம் கோரிக்கை
HIGHLIGHTS
கரூர் ரயில் நிலைய சந்திப்பில் ரயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். பகல் நேரத்தில் பெங்களூருக்கு இரயில் இயக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி தலைவரும், ரயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினருமான பொன் பாலகணபதி, சிவராஜ் கே.காண்ட்கே, பபிதா பார்மர், எட்டுமனூர் ராதாகிருஷ்ணன், ப்ரணாப் பவுரா ஆகிய 5 பேர் கொண்ட குழு கரூர் ரயில் நிலைய சந்திப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா? வேறு என்ன வசதிகள் தேவை? பயணிகள் காத்திருப்பு அறை, கேண்டீன், கழிப்பிடங்கள், பார்சல், பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தனர். அதன்பிறகு கரூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் விசாகன், கரூரில் இருந்து பெங்களூருக்கு பகல்நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். ஆய்வின்போது கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன், பாஜக மாவட்ட தலைவர் கே.சிவசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் நகுலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.