கைத்தறி துணிகளை பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்
கரூரில் 7வது கைத்தறி தினத்தையொட்டி அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்
HIGHLIGHTS
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 வது கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்று வருகிறது.
தேசிய கைத்தறி தினமானது கடந்த 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7 ம் நாள் கல்கத்தாவில் உள்ள நகர மன்றத்தில் வங்கப்பிரிவினையை எதிர்த்தும், சுதேசி இயக்கத்தின் துவக்கமாகவும் பொதுமக்களால் நடத்தப்பெற்ற சுதந்திரப்போராட்டத்தினை நினைவு கூறும் விதமாகவும், உள்நாட்டு உற்பத்திப்பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாப்பட்டு வருகிறது.
7 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கைத்தறி கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் கரூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பெட்ஷீட்டுகள் , தலையணை உறைகள், துண்டுகள், பருத்தி சேலை இரகங்கள், விருதுநகர் மாவட்ட அருப்புக் கோட்டை பகுதி பருத்தி சேலைகள், மற்றும் திருச்சி மாவட்ட உறையூர் பருத்தி சேலை இரகங்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கைத்தறிகண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்களுக்கான கைத்தறி ஆதரவு திட்டம் அரசின் பங்களிப்பு தொகையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தின் கீழ் 90 சத அரசு மான்யம் மற்றும் 10 சத உறுப்பினர் பங்களிப்புடன் சங்க உறுப்பினர்கள் 5 நபர்களுக்கு தலா ரூ.3500/ - மதிப்பிலான தறி உபகரணங்களும், கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இரண்டு நபர்களுக்கு தலா ரூ. 50,000/ கடனுதவிகளையும் ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், துணை இயக்குனர் சுகதார பணிகள் டாக்டர். சதீஷ், கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.