தொழிலாளி மீது தாக்குதல்: ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உள்ளிருப்பு போராட்டம்.
HIGHLIGHTS
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிரசவ வார்டில் ஒப்பந்த பெண் தொழிலாளி ஜெயலட்சுமி பாதுகாப்பு பணியில் இருந்தார். பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த பவித்ரா என்ற பெண்ணின் உறவினர் இரவு பத்து முப்பது மணிக்கு மேல் பவித்ராவை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இரவு நேரம் என்பதால் நோயாளியைப் பார்க்க ஒப்பந்தத் தொழிலாளி ஜெயலட்சுமி அனுமதிக்கவில்லை. இதையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஜெயலட்சுமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஜெயலட்சுமியை தாக்கியவரை கைது செய்ய கோரி, பணிகளை புறக்கணித்து விட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவ அதிகாரி முருகராஜ் தொழிலாளர்களை சமாதானப்படுத்தி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.