அரசு ஊழியர்கள் சாலை மறியல்- 200 பேர் கைது
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும், கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு ரூ. 50 இலட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கம் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நகர காவல்நிலைய போலீசார் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை கைது செய்தனர்.