சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
காஞ்சி குமரக்கோட்டம் என அழைக்கப்படும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா 12 நாள் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
நகரேஷு காஞ்சி என்று சிறப்புடன் போற்றப்படும் தொண்டைநாட்டு தலைநகரமான காஞ்சி சைவம், வைணவம், சாக்தம் , கௌமாரம், சௌரம், காணபத்யம் ஆகிய சண் மதங்களின் வழிபாட்டின் சிறப்பிடமாகவும், பஞ்சபூத தலங்களில் நிலமாகவும், பல்லவபுரியாகவும் , பெரிய மகான்களும், அறிஞர்களும் அவதரித்த ஞான பூமியாக திகழும் காஞ்சியில் அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம், அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்த மூர்த்தமாக குமரகோட்ட ஆலயம் அமைந்துள்ளது.
பிரணவ மந்திரத்திற்கு பொருள் கேட்டு, பதில் தெரியாமல் விழித்த பிரம்மனை சிறையில் இருந்து தானே படைத்திட மேற்கொண்டு கையில் கமண்டலம், ருத்திராட்ச மாலையுடன் , பிரம்மாவின் கோலத்தில் குமரக்கோட்டம் முருகன் அருள்பாலிக்கிறார்.
கி.பி.16ம் நூற்றாண்டில் இத்தலத்து முருகன் தனக்கு கந்த புராணம் எழுத ஆலய அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியருக்கு திகடசக்கரம் என்ற முதல் அடியை எடுத்து சொல்ல 10,345 பாடல்கள் எழுதியதை பிழைதிருத்தி முருகனே உடனிருந்து அரங்கேற்றிய திருத்தலமாக விளங்குகிறது.
இத்திருத்தலத்தின் வைகாசி விசாக பெருவிழா இன்று அதிகாலை கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடிமரம் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு பிரம்மோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க ஏற்றப்பட்டது.
அதன்பின் உற்சவர் காலை புறப்பாடு கண்டார். கொடியேற்ற விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த வைகாசி திருவிழாவின் ஐந்தாம் தேதி தேவேந்திர மயில் வாகனமும், 9ஆம் தேதி திருத்தேர் நிகழ்வும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.