பள்ளி,கல்லூரி மாணவர்களை ஓட விடும் அரசு பேருந்துகள் :கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை..!
TN Govt Bus-வாலாஜாபாத் - தாம்பரம் சாலையில் தேவரியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்க பலமுறை கோரிக்கை மனு அளித்தும் ஓட்டுநர்கள் நிறுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
HIGHLIGHTS
TN Govt Bus-காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் , வாலாஜாபாத் - தாம்பரம் சாலையில் தேவரியம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் தேவரியம்பாக்கம் , லிங்காபுரம் , தோண்டாங்குளம் , கொசப்பட்டு , நல்லூர் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளடக்கியுள்ளது.
இப்பகுதியை சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், பணிக்கு செல்லும் பொதுமக்களும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். இவ் வழியாக செல்லும் 79 தடம் எண் கொண்ட அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. ஆனால், பேருந்து பலகை வைத்தும் , இதுவரை பல மனுக்கள் பல துறைக்கு கோரிக்கை வைத்தும் , பலமுறை இப்பகுதி மக்கள் அறிவுறுத்தியும் பேருந்துகள் நிற்காமல் செல்வதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் 579 தடம் எண் கொண்ட பேருந்துகள் மாணவர்கள் அலுவலகம் செல்வோர் அதிகம் பயணிக்கும் காலை மாலை நேரங்களில் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாகவோ அல்லது தள்ளியோ நிறுத்தி இறங்க வேண்டிய பயணிகளை மட்டும் இறக்கி விட்டு விட்டு பயணிக்கத் தயாராக உள்ள மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோரை பேருந்துகளில் ஏற்றாமல் சென்று விடுகின்றனர்.
இதனால் மாணவர்களும் பயணிகளும் அங்கும் இங்கும் நெடுஞ்சாலையில் ஓடி அலைந்து அல்லல் பட்டு பேருந்துகளில் பயணிக்க வேண்டிய அபாய நிலை உள்ளது. இதுகுறித்து மாணவ மாணவிகளும் பயணிகளும் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் துணை தலைவர் கோவிந்தராஜ் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து அங்கு வந்து சேர்ந்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் பேருந்து நின்று செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எனவே, இங்கு போக்குவரத்து ஆய்வாளரை நிறுத்தி முறையாக பேருந்துகள் நிறுத்தங்களில் நின்று செல்லவும் பள்ளி மாணவர்கள் அலுவலகம் செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆபத்து இல்லாத வகையில் பயணம் செய்திட பேருந்துகள் நின்று சென்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுவாக, இந்த சாலையில் மாநகர பேருந்துகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் காலை நேரங்களில் அலுவலகம் செல்வோரையும், முற்றிலும் தவிர்த்துவிட்டு பயணிகள் ஏற்கனவே அதிகமாக இருப்பதாகக் கூறி சென்று விடுகின்றனர்.
இதனால், காலை நேரங்களில் வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் வரை குறுகிய பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும் என்றும், பேருந்துகள் இல்லாமல் காலம் தாழ்த்தி செல்வதால் வேலைக்குச் செல்வோருக்கு வருவாய் இழப்பும் மற்றும் கல்லூரி மாணவர்களின் வகுப்புகள் என பலபாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் இதை கவனத்தில் கொண்டு அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2