இறந்தவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
காஞ்சிபுரத்தில் இறந்து 40 நாட்கள் ஆன முதியவருக்கு இரண்டாவது தடுப்பூசியை செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று 500 இடங்களில் மாவட்டம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 99 சதவீத பேர்களும் இரண்டாவது தடுப்பூசிகளை 43 சதவீத நபர்களும் செலுத்தி கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவை சேர்ந்த பொம்மை தயாரிப்பாளர் ரகு என்பவர் கடந்த மாதம் 8ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தி கொண்டுள்ளார்.
இவர் இறந்து 40 நாட்கள் ஆன நிலையில், இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இரண்டாம் தவணை ஊசி செலுத்தி கொண்டதாக அவரது எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
திடீரென அலைபேசியில் தகவல் மணி அடித்ததும் குறுஞ்செய்தியை அவரது தம்பி மகன் பார்த்தபோது இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு வந்த செய்தி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்து 40 நாட்கள் ஆன நபருக்கு தடுப்பூசி செலுத்தியதாக அதனுடைய சர்டிபிகேட் பதிவிறக்கம் செய்யப்பட்டு அக்குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர்