காஞ்சிபுரத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்க நாணயம்
காஞ்சிபுரம் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்களில் 3 பேருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுபட்ட 4 லட்சம் பேர் நாளை இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதனை ஆய்வு செய்த பெருநகராட்சி ஆணையர், வார்டுகள் தோறும் முகாம்கள் நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகளில் மக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும்.
மேலும் நாளை காஞ்சிபுரம் பெரு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் நபர்களிலிருந்து குலுக்கல் முறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் சிறப்பு பரிசாக அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.