எஸ்.பி சுதாகர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சுதாகர் தலைமையில் காவல்துறை அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்
HIGHLIGHTS
இந்திய அரசியல் சட்டச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ் எனும் நகரில் பிறந்தார். நாட்டின் மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதியாக கொண்டாடப்படும் இவர், மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சட்ட நிபுணராகவும் விளங்கியவர்.
இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளான வரும் ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நாளில், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
நாளை இந்தியா முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காலை 11 மணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து "சமத்துவ நாள்" உறுதி மொழியான,
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும் , ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,
சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என எஸ் பி சுதாகர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா உறுதிமொழி வாசிக்க அரசு அலுவலர்கள் அனைவரும் கூறி உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பாபு , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நலத்துறை அலுவலர் பிரகாஷ் வட்டாட்சியர் காஞ்சனாமாலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.