உள்நோயாளிகளின் உறவினர்கள் விடுதியில் பகலிலும் தங்க அனுமதிக்க கோரிக்கை
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளின் உறவினர்களை தங்கும் விடுதியில் பகலிலும் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனை என்பதால் ஏழை, எளிய பொதுமக்கள் உள்நோயாளிகளாக இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் 2016 - 17கீழ் உள் நோயாளிகளுடன் அவர்களின் உறவினர்கள் தங்க ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் இலவச தங்கும் விடுதி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு தனியார் அமைப்பு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் தற்போது உள் நோயாளியுடன் தங்கள் உறவினர்கள் இரவு நேரத்தில் மட்டுமே தங்கும் விடுதியில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர். பகல் நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய தங்கும் வெளி அரங்கத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறையில் பகல் நேரங்களிலும் நோயாளிகளின் உறவினர்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.