சித்ரகுப்தன் திருக்கோயிலில் வேலூர் இப்ராஹிம் சாமி தரிசனம்
பாஜக சிறுபான்மைப்பிரிவு தேசிய செயலாளர் வேலூர் என்.இப்ராகிம் காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
HIGHLIGHTS
பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர் நலப் பிரிவு சார்பில் காஞ்சிபுரத்தை அடுத்த கருக்குப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா,பாஜகவின் 42வது ஸ்தாபன தின விழா மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டைகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வந்திருந்த சிறுபான்மைப்பிரிவு தேசிய செயலாளர் வேலூர் என்.இப்ராகிம் காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் கோயில்,காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்தில் மகா பெரியவர் அதிஷ்டானம் ஆகியனவற்றில் சுவாமி தரிசனம் செய்தார்.
காமாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த அவர் கூறுகையில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே நடப்பு ஆண்டில் தான் ரூ.30லட்சம் கோடிக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருக்கிறது.இதற்கு முன்பு ரூ.15லட்சம் கோடி வரையே ஏற்றுமதி செய்திருந்தது.
இந்தியாவிலேயே உற்பத்தி செய்த பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருக்கிறோம். சில நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாகவே பெட்ரோல்,டீசலின் விலை ஏற்ற,இறக்கமாகவே உள்ளது.
பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க குறுகிய கால திட்டம்,தொலை நோக்கு திட்டம் என இரு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதில் ஒன்று பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகும். மற்றொன்று பெட்ரோலுக்கும்,டீசலுக்கும் மாற்று எரிசக்தி வாகனங்களை இயக்குவது என்பதாகும்.இதன் மூலம் ஒரு தீர்வை எட்ட முடியும்.
பாஜகவின் 42வது ஸ்தாபன தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நிதியை நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டும் வருகிறது.
காஞ்சிபுரத்தில் 500 தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் நல வாரிய அட்டைகளை வழங்கியதாகவும் வேலூர் என்.இப்ராகிம் தெரிவித்தார்.பேட்டியின் போது அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய மாநிலத் துணைத் தலைவர் டி.கணேஷ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் டி.என்.அருள் ஆகியோரும் உடன் இருந்தனர்.