சாதி மதவாதிகளாக செயல்படும் அரசு அதிகாரிகள் - திருமாவளவன்
அரசு அதிகாரிகள் சாதி,மதவாதிகளாக மாறிவிட்டதாக காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் , கோவிந்தவாடி, அகரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் அரசு துவக்கபள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இந்நிலையில் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை பரிந்துரை செய்ததின் பேரில் நபார்டு வங்கி நிதி 85 சதவீதமும் , 15 சதவீதம் மாநில அரசு என சுமார் ரூ. 8 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டு கட்டுமான பணிகள் 5 சதவீதம் முடிந்த நிலையில் , அக்கிராமத்தை சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் நீர்நிலை புறம்போக்கில் கட்டிடம் கட்ட அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றது. மேலும் முதலமைச்சர் தனிபிரிவில் மனு செய்து அதன் அறிக்கையில் கட்டுமான பணிகள் நடக்காது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கட்டுமான பணிகளை திட்டமிட்ட பகுதியிலேயே தொடர்ந்து மேற்கொள்ள கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன் , அரசியல்வாதிகள் தான் சாதி, மதவாதிகளாக உள்ள நிலையில் தற்போது அரசு அதிகாரிகளும் சாதிய மதவாதிகளாக மாறி ஒரே பக்கமாக செயல்பட்டு வருவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் , கோவிந்தவாடி அகரம் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.