234 தொகுதிகளிலும் தனித்து போட்டி!-அர்ஜுன் சம்பத்
அதிமுக கூட்டணியில் நாங்கள் 5 இடங்களை கேட்டுள்ளோம். கூட்டணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நிர்வாகிகளிடம் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன்சம்பத் விருப்ப மனுக்களை பெற்றார். முன்னதாக திண்டுக்கல் அபிராமி அம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், இந்து மக்கள் கட்சி ஆன்மீக அரசியலில் ஈடுபட்டு வருகிறது. பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் எங்களுக்கு 5 இடங்களை கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்களுக்கு அதிமுகவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும்.
காங்கிரஸ் கட்சி விரைவில் ரோமன் கத்தோலிக்க காங்கிரஸ் ஆக மாறிவிடும் . திமுக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்காக அந்த அமைப்பினை சேர்ந்த நபர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கி தருகின்றனர். ஆனால் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களை பற்றி எந்த அரசியல் கட்சியும் கவலைப்படுவதில்லை. இந்து மக்கள் கட்சி மட்டுமே இந்து மக்களை பாதுகாக்கும் ஒரே கட்சி.இவ்வாறு அவர் தெரிவித்தார்.