அரியலூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 328 மனுக்கள்
அரியலூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட328 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை : கலெக்டர் உத்தரவிட்டார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பெற்று, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
20-வது தேசிய பாரா தடகளப் போட்டி ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் 28.03.2022 முதல் 31.03.2022 வரை நடைபெற்றது. இதில், வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவகாமி என்பவர் தான் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
இக்கூட்டத்தில், செந்துறை வட்டம், கழுமங்களம் கிராமத்தில் தீவிபத்தினால் உயிரிழந்த ராணி என்பவரின் வாரிசுதாரர்களிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-க்கான காசோலையினையும், அரியலூர் மாவட்டத்தில் 2021-2022-ஆம் நிதி ஆண்டில் மது அருந்துவது மற்றும் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, இணையவழி வாயிலாக ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, விழிப்புணர்வு வாசக போட்டி மற்றும் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.3000/-ம், மூன்றாம் பரிசாக ரூ.2000/-ம் என பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் உரிய அறிவுறுத்தலின்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தி பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற 65 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பின்னர் அரியலூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 16 முஸ்லிம் மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், வட்டாட்சியர் (மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை) கிருஷ்ணமூர்த்தி, முஸ்லிம் மகளிர் சங்க செயலாளர் ஜான்பீவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.