திருவண்ணாமலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்...
திருவண்ணாமலையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆயுதப்படை மைதானத்தில் 74 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பறக்க விட்டார்.
நிகழ்ச்சியின் போது சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தினை வழங்கினார். மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு விலை இல்லா தேய்ப்பு பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி ஆகியவை வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயங்களை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவை பணியாற்றியமைக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
தொடர்ந்து, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர், தண்டராம்பட்டு ஒன்றியம் சேர்ப்பாப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்து கொண்டு வேளாண்மை துறை, வருவாய் துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் கம்பன், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, கூடுதல் ஆட்சியர் பிரதாப் சிங் , உதவி ஆட்சியர் ரஷ்மி ராணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல் , தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.