முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்க ஐகோர்ட் தற்காலிக தடை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை அமைக்க ஐகோர்ட் தற்காலிக தடை
HIGHLIGHTS
திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், வேங்கைக்கால் பகுதியில் சிலை அமைப்பதற்காக ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட இடத்தின், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலைக்கு பல்வேறு மாநிலங்கள் நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துபோகும் இடத்தில், கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் சிலையை நிறுவுவதற்காக பில்லர்கள அமைக்கப்பட்டு, அவசர அவசரமாக பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தரப்பில், இது தனியார் சொத்து என்றும், அதில் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.