திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஷ்மி ராணி, மகளிா் திட்ட இயக்குநா் சையத் சுலைமான், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட தண்டராம்பட்டு வட்டம், கீழ்பாச்சர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு விபத்து நிவாரண நிதி உதவித்தொகை ரூ.50,000/-ம் பெறுவதற்கான ஆணையை அவரது மனைவி சண்முகவள்ளி அவர்களிடமும், சேத்துப்பட்டு வட்டம், நெடுங்குணம் கிராமம் பழங்குடியினர் நகரை சேர்ந்த . சகுந்தலா என்பவருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25,000/-ம் பெறுவதற்கான ஆணையையும் மற்றும் சேத்துப்பட்டு வட்டம் ஆளியூர் கிராமம் இருளர் காலணியை சேர்ந்த சிங்காரகண்ணி என்பவருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25,000/-ம் பெறுவதற்கான ஆணையையும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், அவர்கள் வழங்கினார்.
சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மனு
ஜமுனாமரத்தூர் தாலுகா எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜவ்வாதுமலை ஒன்றியம் கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தம்பட்டு கிராமத்தில் 190 குடும்பத்தை சேர்ந்த 950-ம் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றோம். எங்கள் கிராமத்தில் முறையாக சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றோம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ வசதிக்காக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. காலம் காலமாக கல்வி, மருத்துவம், சாலை போன்ற அடிப்படை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றோம்.
கடந்த 15-ந் தேதி சாந்தி என்பவர் வயிற்று வலியால் உடல் நல குறைவு ஏற்பட்டு டோலி கட்டி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். உரிய நேரத்தில் செல்லாததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபோல பல உயிர்களை நாங்கள் இழந்து விட்டோம்.
சாலை வசதி கேட்டு பல முறை புகார் மனு அளித்தும் எங்கள் கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை.
எனவே இனிமேல் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாமல் இருக்க முறையான சாலை வசதியை மாவட்ட நிர்வாகம் அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.