இடைநின்ற அனைத்து மாணவா்களையும் மீண்டும் வரவழைக்க ஏற்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு
இடைநின்ற அனைத்து மாணவா்களையும் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது குறித்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பல்வேறு காரணங்களால் நீண்ட நாள்களாகப் பள்ளிக்கு வராத மாணவா்களை மீண்டும் பள்ளிகளுக்கு வரவழைக்க வீடு , வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் சென்றடைவதில் உள்ள இடர்பாடுகளை சரி செய்ய வேண்டும். இதற்காக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை, வங்கிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து முகாம்கள் நடத்தி ஊக்கத்தொகைகள் மாணவர்களுக்கு விரைவில் சென்றடைய உறுதி செய்ய வேண்டும்.
நின்றுபோன அனைத்து மாணவா்களையும் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சாந்தி, கல்வித் துறை அலுவலா்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.