‘நடப்போம், நலம் பெறுவோம்’ திட்டம்: துணை சபாநாயகர் தொடக்கம்
திருவண்ணாமலையில் நடைபெற்ற 8 கி.மீ. தொலைவு 'நடப்போம், நலம் பெறுவோம்' திட்ட நடைப் பயிற்சியை சட்டப்பேரவை துணைத் தலைவா் தொடங்கி வைத்தாா்.
HIGHLIGHTS
நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ (Health Walk) என்ற சிறப்பு திட்டத்தை தமிழக சுகாதாரத் துறை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று காலை நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள முத்துலட்சுமி பூங்காவில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, திருவண்ணாமலை-வேலூா் சாலை, அண்ணா நுழைவு வாயில் பகுதியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்து நடைப் பயிற்சியில் கலந்து கொண்டாா்.
தொடா்ந்து, காஞ்சி சாலையில் உள்ள அடி அண்ணாமலை கிராமம் வரை சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டு மீண்டும் அடிஅண்ணாமலை கிராமத்தில் இருந்து மீண்டும் அண்ணா நுழைவு வாயில் வரை இந்த நடைப்பயிற்சி நடைபெற்றது.
இதன் மூலம் மொத்தம் 8 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயிற்சி நடைபெற்றது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி 10 ஆயிரம் அடிகள் அதாவது எட்டு கிலோமீட்டர் நடப்பதால் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்கள் 28 சதவீதமும், இதய நோய் முப்பது சதவீதமும் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. நடைப்பயிற்சியானது மக்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் எடையுடன் இருக்கவும், நாள்பட்ட உடல் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இந்த நடைபயிற்சி சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நடைபாதை நிகழ்வானது ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் நடைபெறும் நாட்களில் பொது சுகாதாரத் துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம், சிறப்பு மருத்துவக்குழு மற்றும் நடமாடும் மருத்துவர் குழுக்களின் மூலம் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் நடைப்பயிற்சியில் கலந்து கொள்வதுடன் மருத்துவ முகாமை பயன்படுத்தி பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் நலப் பணிகள் இணை இயக்குநா் நாகராணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் செல்வக்குமாா் (திருவண்ணாமலை), சதீஷ்குமாா் (செய்யாறு) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.