திருவண்ணாமலையில் கொடிநாள் ஊர்வலம்: ஆட்சியர் துவக்கம்
திருவண்ணாமலையில் படை வீரர் கொடிநாள் ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
இந்திய எல்லை படையில் தன் உயிர் காத்து எல்லையில் பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களுக்காகவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்காகவும் ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் தேதி தேசிய கொடி நாள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி திருவண்ணாமலையில் படை வீரர் கொடிநாள் ஊர்வலம் நடைபெற்றது. தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குனர் சுரேஷ் நாராயணன் தலைமை தாங்கினார். கொடிநாள் ஊர்வலத்தை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் காந்தி சிலையை சென்றடைந்தது. ஊர்வலத்தின்போது கொடிநாள் நிதி திரட்டப்பட்டது. முன்னதாக மாவட்ட ரெட்கிராஸ் சங்க தலைவர் பா.இந்திரராஜன் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த கொடிநாள் செய்தியினை வாசித்தார்.
கொடிநாள் ஊர்வலத்தில் தாசில்தார் எஸ்.சுரேஷ், உள்பட அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆரணி தாலுகா அலுவலகத்தில் இருந்து தாசில்தார் ஆர்.ஜெகதீசன் தலைமையில் கொடி நாள் ஊர்வலம் தொடங்கியது. தலைமையிடத்து துணை தாசில்தார்கள், திருவேங்கடம், சங்கீதா, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம். தனலட்சுமி கலந்து கொண்டு கொடிநாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து உண்டியலில் பணம் செலுத்தி தொடங்கினார்.
இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறையினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கொடிநாதள் நிதி திரட்டினர்.