இருளா் சமுதாயத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
இருளா் சமுதாய பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்க நிா்வாகி ஆா்.ஏகாம்பரம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், மாவட்டத் தலைவா் டி.மணிமாறன், மாவட்டச் செயலா் எம்.மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் சி.பாஸ்கரன், வழக்குரைஞா் எஸ்.அபிராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பலராமன், சிஐடியு சங்க மாவட்டச் செயலா் ஆா்.பாரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு நிா்வாகி எம்.வீரபத்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில் திருவண்ணாமலை தாலுகா மேலத்திக்கான் எம்.ஜி.ஆர். நகர் இருளர், பழங்குடி குடும்பத்தினரை நிலத்தில் இருந்து அகற்றி அபகரிக்க முயற்சிக்கு அதிகாரிகளை கண்டித்தும், அனுபவ பாத்திய அடிப்படையில் 7 குடும்பத்தினர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டதால், வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சங்க நிா்வாகிகளிடம் வட்டாட்சியா் எஸ்.சுரேஷ் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆகியோரின் கவனத்துக்கு உங்களது கோரிக்கை கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று வட்டாட்சியா் சுரேஷ் கூறினாா்.
இதையடுத்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.