திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமி தரிசனம் செய்தார்.
HIGHLIGHTS
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மட்டுமின்றி முகூர்த்த தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலமும் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமி தரிசனம் செய்தார். இன்று அவர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அப்போது அவரை காண பக்தர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர். சிலர் அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக நடிகர் அருண்விஜய் நேற்று இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்.
சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் அருண்விஜய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
2 வருடங்கள் கழித்து சாமி தரிசனம் செய்ய அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்துள்ளேன். என்னுடைய ஒவ்வொரு படம் ரிலீசுக்கு முன்பு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்வேன். கடந்த 2 வருடங்களாக கொரோனா நோய் தொற்றால் உலகம் முழுவதும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலை மாறி இயல்பு நிலைக்கு வர வேண்டும். இந்த வருடத்தில் சினம், பார்டர், யானை போன்ற என்னுடைய படங்கள் ரிலீசாக உள்ளது. இந்த வருடம் எனக்கு மிகச் சிறந்த வருடமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த மாதம் (பிப்ரவரி) மாதம் ரிலீசாக வேண்டிய படங்கள் மார்ச் மாதத்துக்கு தள்ளி சென்று விட்டன. யானை படமும் மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்வதற்கு முடிவு செய்து இருந்தோம்.
விரைவில் படம் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வரும். பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு இசை உலகத்துக்கு பேரிழப்பு ஆகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.