திருவண்ணாமலை குறை தீர்வு நாள் கூட்டத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
Grievance Redressal Committee - திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சித்தனர்.
HIGHLIGHTS
Grievance Redressal Committee -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 417 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும் ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் வெங்கடேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், வருவாய் கோட்டாட்சியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கம் தாலுகா பெரியகாயம்பட்டு பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி இந்திராணிஎன்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசாரின் விசாரணையில், இவர் குடும்பத்துடன் வசித்து வரும் இடத்தின் ஆவணங்களை வருவாய்த்துறையின் ஆன்லைனில் தவறாக பதிவு செய்து உள்ளனர்.
தவறான பதிவேற்றத்தை திருத்தி தரக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
அதேபோல் கலசபாக்கம் தாலுகா சின்னக்காலூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அவர் கூறும்போது சமீபத்தில் அவரது மனைவி உயிரிழந்து விட்டார். இவருக்கு 3 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளது. அவரது மகன் நிலத்தையும், வீட்டையும் ஆக்கிரமித்து கொண்டு அவரது அடித்து வீட்டில் இருந்து வெளியே துரத்தியதாகவும், இது குறித்து கலசபாக்கம் போலீசில் புகார் செய்தால் போலீசாரும் தன்னை மிரட்டுவதாகவும், இதனால் தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் மேல்விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2