10 சவரன் நகை பறிப்பு
-வழிப்பறிக் கொள்ளையனின் கைவரிசை
HIGHLIGHTS
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜா என்பவர் அசோக் நகர் 1வது தெருவில் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது மனைவி மார்க்கெட்டுக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பின் தொடர்ந்து வந்த செயின் பறிப்பு கொள்ளையன், அக்கம் பக்கம் யாரும் இல்லாத இடமாக பார்த்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சாவகாசமாக ஹெல்மெட்டை கழட்டி வைத்துவிட்டு, பின்னர் முக கவசம் அணிந்து கொண்டு பின் தொடர்ந்து சென்று ராஜாவின் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துசென்றான்.
ராஜாவின் மனைவி சுதாரித்துக்கொண்டு கொள்ளையனை பிடிக்கச் சென்றார். மின்னல் வேகத்தில் ஓடிய கொள்ளையன் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஸ்டைலாக ஹெல்மெட்டை அணிந்து கொண்டு தப்பி சென்றான்.
இந்த சம்பவம் குறித்து செய்வதறியாது இருந்த நிலையில் நேற்று ராஜா திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்ட முக கவசம் அணிந்து வந்த கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.